Thursday, May 1, 2025

கப்டன் மொறிஸ் (தியாகராஜா பரதராஜன்) 12.09.1969-01.05.1989

 

ஈழநாதம் பத்திரிகை 29.04.1990

கள நிகழ்வுகளும் தள நினைவுகளும்
நேதாஜி

கப்டன் மொறிஸ் (தியாகராஜா பரதராஜன்) பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளனாக தனது பொறுப்புக்களையெல்லாம் திறம்பட ஆற்றிய அந்த வீரமறவன் வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட தினம் கடந்த வருடம் மே தினம் ஆகும். 1886 ஆம் வருடம் சிக்காகோ நகர தொழிலாளர்கள் சிந்திய இரத்தம் உலகம் பூராவும் இன்று செங்கொடியாகப் பறப்பது போல மொறிஸ் போன்ற 1355 விடுதலைப் புலிகளும் 26000 பொதுமக்களும் சிந்திய குருதியில் இரத்தச் சிவப்பேறிய கொடியாக தியாகத்தின் சின்னமாக இன்று தமிழீழம் எங்கும் எங்கள் தேசியக் கொடியாகப் புலிக்கொடி பறந்து கொண்டிருக்கிறது.

கப்டன் மொறிஸ் எப்படி ஒரு போராளியானான்? 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் தென்னிலங்கையில் தீயோர் இட்ட தீயின் நாக்குகள் சுவாலையாக வடிவெடுத்து தமிழர் சொத்துக்களை சாம்பல் மேடுகளுக்குச் சொந்தமாக்கின. இது வட இலங்கை வாலிபர்கள் நெஞ்சில் வெப்பக்கனலாக மூண்டெரிந்தது. இதே கலவரத்தில் தென்னிலங்கைத் தமிழர்கள் சிந்திய குருதி வட இலங்கை இளைஞர்களின் நாடி நரம்புகளில் விடுதலைத்தியாகத்திற்குச் சூடேற்றியது. போராட்டத்திற்கான இராணுவக் கட்டமைப்பு உருவானது. இந்தக் கட்டமைப்பு மொறிசையும் உள் வாங்கிக் கொண்டது.

ஒரு நாள் 1984 ஆம் ஆண்டு பருத்தித்துறை மேற்கில் உள்ள முருகையன் கோவில் அருகில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளுக்காக சென்றியில் நின்றிருந்த மொறிசை இலங்கை இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது. இராணுவச் சுற்றி வளைப்பை உடைத்துக் கொண்டு வெளியேறுவதே மிகப் பொருத்தமான நடவடிக்கை என்பது மொறிசுக்கு விளங்கியது. இவ்வாறான ஒரு சுற்றிவளைப்பின் போது ஒரு கெரில்லாப் போராளி தனக்கு முற்றிலும் பிரதிகூலமான நிலைமையில் நின்று கொண்டு தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதிலும் பார்க்க தப்பிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுதலே அனுகூலமான இராணுவநடவடிக்கையாக இருக்கும். மொறிசின் மூளை துரிதமாகச் செயற்பட்டது. ஒரு கடிகாரத்தின் பெரிய முள் ஒரு நிமிடத்தைக் கடக்கு முன் கையில் இருந்த கிரனைட்டைக் கழற்றி இராணுவத்தினர் மீது மொறிஸ் வீசினான். கிரனைட் வீச்சால் நிலைகுலைந்த இராணுவம் தம்மைச் சுதாகரித்துக் கொண்டு மறுதாக்குதலுக்குத் தயாராகுமுன் அந்தச் சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு மொறிஸ் வெளியேறினான். அப்போது மொறிசுக்கு மார்க்கண்டேயரிலும் பார்க்க ஒரு வயது குறைவு.

இவ்வாறாகப் படிப்படியாக பல தாக்குதல்களிலும் விடுதலைப் புலிகளோடு இணைந்து ஈடுபட்ட மொறிஸ் 1986 ஆம் ஆண்டு தொண்டைமானாற்று இராணுவத்துடன் ஒரு நாள் ஒரு பெரிய மோதலில் ஈடுபட்டான். 1984 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்; அத்துலத் முதலியை, தேசிய பந்தோபஸ்து அமைச்சராக நியமித்த போது அவர் “மூன்று மாதத்தில் வடபகுதியில் அமைதியைக் கொண்டுவருவேன்“ எனச் சபதமெடுத்து இரண்டு புதிய முகாம்களை குடாநாட்டிற்குள் அமைத்தார். ஒன்று நாவற்குழியில் அமைக்கப் பட்டது. மற்றது தொண்டைமானாற்றில் அமைக்கப் பட்டது. இந்தத் தொண்டைமானாறு முகாமில் இருந்த இராணுவம் அங்கிருந்து வெளியேற முயன்ற போது அந்த இராணுவத்துடன் வீராவேசத்துடன் மோதிய விடுதலைப்புலிகளில் மொறிசும் ஒருவனாவான். இம் மோதலில் மொறிஸ் காயமுற்று விழுப்புண்களைத் தனது உடலில் சின்னமாகப் பெற்றுக் கொண்டான்.

ஏப்ரல் பத்தொன்பதாம் திகதி நல்லூரில் இடம்பெற்ற எழுச்சி விழாவில் பேசிய விடுதலைப் புலிகளின் பிரமுகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“இலங்கை அரசாங்கம் வடமராட்சி மீது நடாத்திய ஒப்றேசன் லிபறேசன் தொடர்பான விபரம் முன்கூட்டியே இந்திய அரசுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இந்திய றோ அதிகாரிகளோ நயவஞ்சகமாக யாழ்ப்பாணத்தின் மீதுதான் இலங்கை அரசு ஒரு பாரிய தாக்குதலை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக எமக்கு பிழையான தகவலைத் தந்து எமது போராளிகளைப் பிரிக்கச் செய்து எமது பலத்தைக் குறைத்து எதிரிகளுக்குத் துணை போனார்கள். என்று குற்றம் சாட்டினார்.

இந்தப் பாரிய நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசுக்கு இந்தியா துணை போனதன் மூலம் இலங்கை விடயங்களில் தலையிட ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டது. இந்தப் பாரிய நடவடிக்கைக்கு எதிராக பல விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் பங்கேற்ற மொறிஸ் தனது பங்களிப்பைச் செய்தான். இந்தத் தாக்குதலின் போதுதான் மொறிஸ் தனது உயிர் நண்பனான லெப். வீமனை(நாகராசா) இழந்து வேதனைக்குள்ளானான். ஒப்றேசன் லிபறேசன் காலத்திற்குப் பின்னர் சிங்கள இராணுவவீரனைப் போல் வேடம் போட்டு சிங்களச் சிப்பாய்களைத் தேடி அலைந்த மொறிஸ் சிறந்த கண்ணிவெடித் தாக்குதல் வீரனாக (MINES OPERATER) விளங்கினான். இதனால் M. O. என்ற கௌரவப்பெயர் இவனுக்கு வழங்கப்பட்டது“

விடுதலைப்புலிகள் 1987 ஆம் ஆண்டு முற்பகுதியில் குடாநாட்டிற்குள் இருந்த பல மினி முகாம்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்தகையதொரு மினி முகாம் தாக்குதல் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி மாலை 5,30 மணியளவில் பூநகரி ஒல்லாந்தர் கோட்டையினுள் தங்கியிருந்த இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்டது. இது அந்த ஆண்டில் இடம்பெற்ற எட்டாவது மினி முகாம் தாக்குதலாகும். அத்தோடு இந்தத் தாக்குதல் பல வழிகளிலும் அரசியல் முக்கியத்துவம் பெற்றதொரு இராணுவ நடவடிக்கையாகும். இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் மூலம் எமது போராட்டத்தின் உறுதித் தன்மை இரண்டு அரசுகளுக்கு எடுத்துரைக்கப் பட்டது.

இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கும்படி விடுதலைப் போராட்டத் தலைவர்களை இந்தியா டில்லியில் வைத்து நெருக்குதல் செய்த வேளையில் மறுபுறம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு போராளிகள் ஆயுதங்களையும் ஒப்படைத்து போராளிகளின் கடந்தகால நடவடிக்கைகளுக்காக தம்மிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தர்மிஸ்டர் ஜே. ஆர். கூறிக்கொண்டிருந்த வேளையில் மில்லர் பாணியில் நடந்த இத் தாக்குதல் ஒரு அதிர்ச்சி வைத்தியமேயாகும்.

இத்தாக்குதலிலும் மொறிஸ் பங்கு பற்றினான். ஒரு சினைப்பர் தாக்குதல் வீரனாகப் பங்குபற்றிய மொறிஸ் எரிகாயங்களுடன் உயிர் தப்பினான். இதனால் மொறிசின் அழகிய முகத்திலும் எரிகாயத்தின் வீரவடு அவனால் பொறிக்கப்பட்டது. இத்தாக்குதலில் மேஜர் அசோக் உட்பட ஏழு விடுதலைப்புலிகள் தம்மை முழுமையாக அர்ப்பணம் செய்து வீரமரணமடைந்தனர்.

1987ஆம் ஆண்டு உருவான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் அடிமைச்சாசனம் என்று வர்ணித்தனர். அதனைத் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் நெடுமாறன் இரண்டு அரசுகளின் கூட்டு மோசடி என்றார். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமுன்னர் புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் அங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது ஈழத்திற்கு வந்திறங்கிய இந்திய இராணுவம் முகாம்களை விட்டு வெளியேறி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய முயன்ற போது மக்கள் இராணுவமுகாம்களுக்கு  முன்னால் ஆர்ப்பாட்டம் செய்து தமது தலைவனை அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்து வீதிமறியல் போராட்டம் செய்தனர்.

அடுத்ததாக தியாகி திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் உண்ணா நோன்பை மேற்கொண்ட போது மக்கள் அவனது கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஆங்காங்கே வீதிமறியல் போராட்டம் செய்தனர். இவ்வாறான சாத்வீகப் போராட்டங்களின் போது எல்லாம் பருத்தித்துறைப் பகுதியில் மொறிஸ் மக்களுக்கு பெரும் ஆதரவு கொடுத்தான்.  “போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்ட இலட்சியம் மாறாது“ என்று தலைவர் பிரபாகரன் சுதுமலையில் கூறியதற்கு ஒப்ப காலத்தேவையையொட்டி மக்களை அணிதிரட்டி மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட வெகுஜன போராட்ட வடிவங்களை அவன் மக்களோடு மக்களாக முன்னின்று திறம்பட நடத்தியுள்ளான்.  அவ்வாறான ஒரு வீதிமறியல் போராட்டம் ஒன்றில் ஒருமுறை பருத்தித்துறை வீதி வழியாக ஏகப்பட்ட கவசவாகனங்களோடு வந்த இந்திய இராணுவ  கொமாண்டர் மேஜர் அணில்ராஜ் மறிப்புப் போராட்டத்தின் போது பொதுமக்களால் திருப்பி அனுப்பப் பட்டார்.

இந்தியா விடுதலைப்புலிகள் மீது போர்தொடுத்த பின் கூடவே உண்டு உறங்கிப் பழகிய பல நண்பர்களை மொறிஸ் இழக்க வேண்டி ஏற்பட்ட போது அவன் மிகுந்த வேதனையுற்றான். ஆனால் அவர்களது அகாலமரணங்கள் அவனது உள்ளத்தில் சோர்வை ஏற்படுத்தவில்லை. மாறாக அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று உறுதியையே வளர்த்தன.

போராளிகளுக்கு குழந்தைகள் மீது பிரியம் இயற்கையாகவே ஏற்படுவதுண்டு. இன்றைய குழந்தைகளின் நாளைய நல்வாழ்வுக்காகவே தமது வாழ்வைத் தியாகம் செய்பவர்கள் போராளிகள். அதே போல விடுதலைப் புலிகள் மீது குழந்தைகள் அலாதி பிரியம் வைத்து புலிமாமா என்று அழைப்பது சகஜமான விடயமாகும். தளபதி விக்டர் மடியிலும் தோளிலும் ஏறி அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியுற்ற மழலைகள் பலர். இதே போல மேஜர் அல்பேர்ட்டை ஒரு மழலைப்பட்டாளமே சுற்றி வளைத்துக் கொண்டு மகிழ்ந்து கொண்டாடுவது ஒரு சர்வசாதாரண நிகழ்வாகும். அல்பேர்ட்டும் குழந்தைகளைக் குட்டிச்சாத்தான்கள் என அழைத்து மகிழ்வான். இதே போல மொறிஸ் மாமாவை குழந்தைகள் சுற்றிவளைத்துக் கொள்வதுண்டு. அவனுக்கும் குழந்தைகள் மீது அலாதி பிரியம். ஒருமுறை பருத்தித்துறைப் பகுதியில் இந்திய இராணுவத்திற்கும் – மொறிஸ் தலைமையிலான போராளி குழுவினருக்கும் இடையில் பலத்த மோதல் நடைபெற்ற போது ஒரு நாலு வயதுக் குழந்தை பரதன் மாமாவைக் காப்பாற்றுமாறு கடவுளை வேண்டிப் பிரார்த்தனை செய்தது. இன்னுமொரு தடவை பருத்தித்துறை – தம்பசிட்டி வீதி வழியாக மொறிஸ் தலைமியாலான போராளிக்குழுக்கள் வந்து கொண்டிருந்தனர். அதே பகுதிக்குள் இந்திய இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல் வேட்டைக்காக வந்திருந்தனர். இதனைக் கண்ணுற்ற ஐந்துவயதுப் பிள்ளையொன்று மொறிஸ் மாமா அருகில் வந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் “மாமா ஓடி ஒளியுங்கோ. அவங்கள் வாறாங்கள்“ என்று பாசத்தோடும் பற்றோடும் பதைபதைப்போடும் சத்தம் போட்டுக் கூறியதை மொறிஸ் அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்வான். இவை போன்ற பல நிகழ்வுகள் மொறிஸ் குழந்தைகள் மீது பிரியத்தை வளர்த்துக் கொண்டு தானும் குழந்தைகளோடு ஒரு குழந்தையாக இணைந்து கொண்டு குதூகலிக்கக் காரணமாயிற்று.

ஒருமுறை வடமராட்சிப் பகுதி இராணுவமுகாம் ஒன்றிலிருந்து தப்பி வந்த சீக்கியச் சிப்பாய் ஒருவன் குடிமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களிடம் தன்னை மொறிஸிடம் ஒப்படைக்கும் படி கேட்டுக் கொண்டான். அவனது கோரிக்கை நிறைவேற்றப் பட்டு அவன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டான்.

1989 மே மாதம் முதலாம் திகதி பருத்தித்துறை இராணுவமுகாம், புலோலி இராணுவமுகாம், வியாபாரி மூலை இராணுவமுகாம் என மூன்று முகாம்களிலிருந்து அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவம் ஆத்தியடி என்ற கிராமத்தை மூன்று புறங்களாலும் சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்பாவி மக்களைப் பிடித்து மனிதக் கேடயங்களாக்கிக் கொண்டு அவர்கள் பின்னால் நின்று கொண்டு இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளோடு யுத்தம் நடாத்த முற்பட்டது. மனிதக் கேடயங்களாக நிற்கும் அப்பாவி மக்களைக் காப்பாற்ற விரும்பிய கப்டன் மொறிஸ், லெப். றம்போ, போராளி சிறீ ஆகியோர் தாக்குதலைத் தவிர்க்கவே விரும்பினார்கள். ஆனால் இராணுவத்தினரின் அடாவடித்தனத்தால் போர் தொடங்கியது. மொறிஸ் குறிபார்த்து துப்பாக்கி விசையை அழுத்திய போது ஒரு இராணுவக் கப்டன் அந்த இடத்திலேயே இறந்தான். இதனால் வெறி கொண்ட மதயானைகளைப் போல் இந்திய இராணுவச் சிப்பாய்கள் கண்டபடி சுட்டுத் தள்ளினார்கள். மரங்கள், வீடுகள் எல்லாம் குண்டுகள் துளைத்த வண்ணம் இருந்தன. ஆங்காங்கே கொமாண்டோ மோட்டார் ஷெல் தாக்குதல்களும் இடம் பெற்றன. பெரும் யுத்தம் ஒன்றே அங்கே நிகழ்ந்தது. ஒரு புயலினால் சீரழிக்கப் பட்ட பிரதேசம் போல் அப்பகுதி காணப்பட்டது. யுத்தம் முடிந்து திரும்பி வந்த நண்பர்கள் மொறிஸ் அண்ணாவைத் தேடினார்கள்.

மக்களும் போராளிகளும் யுத்தம் நடந்த இடத்திற்கு விரைந்து மொறிசையும் இரண்டு நண்பர்களையும் தேடினார்கள். மொறிஸ் அணிந்திருந்த கைக்கடிகாரமும் அவனது பாதணி ஒன்றுமே மொறிசைத்  தேடிய மக்கள் கண்களில் பட்டன. மொறிஸ் இறந்த இடத்தில் அவன் சிந்திய குருதியில் தோய்ந்து போயிருந்த மணலை அள்ளி மக்கள் தமது நெற்றியில் பூசிக் கொண்டனர். அவனது உடலை புலோலி இராணுவமுகாமுக்கு சிப்பாய்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.

அவனது உடலை மீட்டு எடுத்து இறுதிச் சடங்குகள் செய்ய முகாமுக்குச் சென்ற மொறிசின் தாயிடம் ஒரு இராணுவக்கப்டன் பின்வருமாறு சொன்னான்

உங்கள் மகன் ஒரு சுத்த வீரன்
கண்ணியமான மக்கள் விசுவாசி
இதையிட்டு நீங்கள் பெருமையடையுங்கள்…

அவனது தாய் அடிக்கடி “நீ இராணுவத்திடம் பிடிபட்டு விடாதே“ என்று அறிவுரை கூறுவதுண்டு. இதனால் மொறிசும் தனது தாயைப்பற்றி நண்பர்களிடம் கூறிப் பெருமைப் படுவதுண்டு. தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து, மண்ணுக்காக மண்ணின் விடுதலைக்காக மரணத்தைத் தழுவிய மொறிசும் மற்றும் றம்போவும் சிறீயும் போராட்ட வரலாற்றுக் களஞ்சியத்தில் புதிய அத்தியாயங்களாகியுள்ளனர்.

கப்டன் மொறிசுடன் அன்றைய தினம் வீரமரணத்தைத் தழுவிக் கொண்ட லெப். ரம்போ (தணிகாசலம் ஜெகதீசன்) போராளி வெள்ளை சிறீ (வடிவேலு சிறீதரன்) ஆகியோருக்கும் எமது வீரவணக்கங்கள்.

சருகு விழும்
உக்கும்
மரத்திற்கே உரமாகும்
மீண்டும்
மரம் துளிர்விடும்
மண்ணை நேசிப்பவர்களின்
மரணம்
இன்னொரு
ஜனனம்
மறந்து விட்ட
மாவீரர்களே!
உங்கள் பாதச் சுவடுகள்
சுதந்திரத்தின் படிக்கற்கள்

 

நான் என் பிள்ளையின் வித்துடலை எடுப் பதற்கான அனுமதியைப் பெறுவதற்காக  இராணுவ முகாம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

இராணுவ சென்றிப் பொயின்ற்றுகளிலிருந்து துப்பாக்கிமுனைகள் என் பக்கம் திரும்புவது எனக்கு நன்றாகத் தெரிந்தது. அடுத்து வரும் நிமிடங்களில் எதுவும் நடக்கலாமென்பதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். ஆனாலும் என்னைத் தைரியமாக இயங்க வைக்கும் ஏதோ ஒரு சக்தி அப்போது என்னை ஆட்கொண்டிருந்தது. எதற்கும் முகம் கொடுக்கத் தயாராகவே நான் முகாம் நோக்கி நடந்துகொண்டிருந்தேன். அரைவாசித்தூரம் நடந்து கொண்டிருக்கும் போதே இராணுவக் கொமாண்டர் கள் முகாம் வாசலுக்கு வந்து, என் வருகையைப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டேன்.
வாசலை அண்மித்ததும் “நான் மொறிஸின் அம்மா” என்றேன்.

அவ்வளவுதான். இராணுவக் கொமாண்டர் ஒருவர் அவசரமாக என் முன்னால் வந்து, என் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்று என்னை ஒரு கதிரையில் அமர்த்தினார். உடனே சுடச் சுட தேநீர் தயாரித்து வந்து எனக்குப் பரிமாறினார்கள். பெரிய பதவிகளில் இருப்பவர்கள் போலத் தோன்றிய மூவர் என் முன்னால் வந்து நின்று குனிந்து என்னை வணங்கினார்கள். பிறகு என்னைப் பார்த்து,

“அம்மா… உங்கள் மகன் ஒரு பெரிய வீரன். அவனின் திறமையைக் கண்டு அவன் ஒரு வயதான பெரிய மனிதன் என்றுதான் இத்தனை நாளும் நாம் நினைத்திருந்தோம். ஆனால் அவன் வயதில்குறைந்த ஒரு இளைஞன் என்று அறியும் போது எங்களால் நம்பவே முடியவில்லை. அவன் மிகவும் நல்லவன். அதனால்தான் அவனை எல்லா மக்களும் நேசிக்கி றார்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது. இத்தனை வீரமும் துணிச்சலும் மிக்க ஒருவனைப் பிள்ளையாகப் பெற்றதற்காக நீங்கள் பெருமைப் படுங்கள். உங்களுக்கு நாங்கள் மரியாதை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம். நீங்கள் ஒரு வீரத்தாய். உங்களை நாங்கள் வணங்குகிறோம்…” என்று ஆங்கிலத்தில் கூறிய படி இரு கைகளையும் குவித்து என்னை வணங்கினார்கள்.

என்னால் அந்த நிமிடத்தை நம்பவே முடியவில்லை!

என் உடல் என்னையறியாமல் மெல்ல மெல்ல நடுங்கத் தொடங்கியது. அவ்வளவு நேரமும் எனக்குள் இறுகிப் போயிருந்த அத்தனை உணர்வு களும் பொங்கியெழுந்து என் கண்களைக் கண்ணீ ரால் மறைக்கத் தொடங்கியது! அந்தக் கணம் வரை நான் கட்டிக்காத்த என் தைரியம் அத்தனையும் ஒரு மேகம் நொருங்குவது போல் கீலம் கீலமாய் சிதறிப் போகத் தொடங்கியது!

நான் எழுந்து நின்றேன். பாதையைக் கண்ணீர் மறைத்தது. நான் அந்தக் கண்ணீரைத் துடைக்கவில்லை. அவர்களோடு சேர்ந்து என் மண்ணின் மைந்தனது வித்துடலை நோக்கி நடக்கத் தொடங்கினேன்!

Friday, February 7, 2025

நான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ்

 


ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒவ்வொரு பெரும் கதை இருக்கும். சில போராளிகள் காவியம் போன்றவர்கள். அவர்களைப் பற்றி அவர்களுடன் வாழ்ந்தவர்கள் எழுதும் பொழுது மனம் சற்று சிலிர்த்துக் கொள்ளும். கப்டன் மொரிஸ் என் நிர்வாகத்துள் தனது போராட்ட வாழ்வை தொடங்கினார், என்று எழுதும் பொழுது என் கண்கள் பனித்து மனதில் அவன் முகம் நேராக தன்னில் வந்து தோன்றுகின்றது.

ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தி நான்காம் ஆண்டு சிங்கள இராணுவம் எங்கும் எப்பொழுதும் திடீர் திடீர் என்று சுற்றி வளைக்கும். அன்று கப்டன் ரஞ்சன் லாலா வடமராட்சியில் தொண்டைமானாறு பகுதியில் தங்கி இருந்த போராளிகளுக்கு (பைலட்டின் ) வழிகாட்டியாக முன் இருசக்கர வாகனத்தில் வல்வட்டித்துறை நோக்கி செல்கின்றார். எதிர்பாராத விதமாக இராணுவத்தை சந்திக்கின்றார். அவர் பின்னால் மிக முக்கிய தளபதிகள் கிட்டு உட்பட வந்து கொண்டு இருக்க இராணுவம் வந்து விட்டது. உடனடியாக இராணுவம் வந்து விட்டது என்று தனது சக போராளிளுக்கு சமிக்கை செய்ய, துணிந்து தனது உயிரை துச்சமாக கருதி இராணுவத்துடன் தனித்து மோதுகின்றார். ஏறக்குறைய ஐந்து நிமிடம் தனித்து நின்று தாக்கி பின் தொடர்ந்த போராளிகளை தப்பி செல்லும் அளவுக்கு நேரத்தை கொடுத்து பின் இராணுவத்தின் போக்கை திருப்பி வேறு திசையில் தனது பின்னே வேறு திசையில் இழுத்து செல்கின்றார். அவரை பின்தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட இராணுவம் அவரை நோக்கி சுட்டவாறு செல்கின்றது. ஏனைய போராளிகள் மற்றைய வீதி ஊடாக தப்பித்து செல்கின்றார்கள். கப்டன் லாலா வீரமரணம் அடைந்து தனது சக போராளிகள் அனைவரையும் காப்பாற்றி இருந்தார்.

அந்த மாவீரனுக்கு ஒரு அஞ்சலிக் கூட்டத்தை தம்பசிட்டி பள்ளிக்கூடம் பின் உள்ள நிலத்தில் நாம் நடத்தி பொதுமக்களுக்கு அவரின் தியாகம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தோம். அங்கு பல இளம் தம்பிகள் கூடி இருந்தார்கள். மிக இரகசியமாக நடக்கும் கூட்டங்களுக்கு நம்பிக்கையான மக்களை மட்டும் தான் எமது பகுதி நேர போராளிகள் அழைத்து வருவார்கள்.

அங்கு ஒரு சிறுவன் பதின்னான்கு வயதுதான் இருக்கும், தானும் இயக்கத்துக்கு வர ஆசைப் படுகின்றேன் என்றான். அவன் மென்மையான மெல்லிய குரல், புன்னகை, சுருண்ட முடி, அவனது பார்வை அதில் ஒரு வெக்கம் அவன் மனதில் புதைத்து இருக்கும் வீரத்தை மிகவும் வேறு ஒரு கோணத்தில் எனக்குக் காட்டியது. எனக்கு அவனை பார்க்கும் பொழுது மனதில் ஒருவித பாசம் உருவாகியது. என் உடன்பிறந்த தம்பிகளின் ஞாபகம் வந்து போனது.

அவனது தலையைத் தடவி “எத்தனாம் வகுப்பு படிக்கிறீங்க?” என்று கேட்டேன். “ஒன்பதாவது” என்றான்.  “பரதன் (மொரிஸ்) தனது இயற்பெயர்” என்றான் .

காவியங்கள் மனதில் வந்தன. அவன் பரதன் தான்… “தம்பி இப்போ படியுங்க, நாங்க கட்டாயம் உங்களை எடுப்போம். முதலில் உதவிகளை வீட்டில் இருந்து செய்யுங்கள். இயக்கம் எல்லோரையும் உடனே உள்ளுக்குள் எடுக்காது தெரியும்தானே. ஒழுக்கம் கட்டுப்பாடு நிறைய இருக்கணும்.  நாங்க உங்களைப் பார்ப்போம். சிலகாலம் உங்க செயல்பாடு எல்லாம் எப்படி இருக்கு என்று பார்போம்” என்று சொல்லி அனுப்பி விட்டேன். பாக்கியும், சஞ்ஜீவனும் அவனிடம் பேசினார்கள். பின் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். பின் சிறிது காலம் நியாயவிலைக் கடைகள் தொடங்கி மக்களுக்கான சேவையை நாம் செய்து கொண்டு இருந்தோம் .

அப்பொழுது மீண்டும் அவன் வந்தான். “சரி பாடசாலை முடிந்து வந்து உதவிகள் செய்யுங்கள்” என்று சொல்லி வைத்தோம். நியாயவிலைக் கடை ஒன்று தம்பசிட்டியில் லேப்டின்ட் சங்கர் (தொண்டைமானறு வீரமரணம்), மேஜர் கேசரி (ஆனையிறவு)அவரின் தம்பி, அவரின் நிர்வாகத்தில்  வைத்து இருந்தோம். “அந்தக் கடையில் பகுதி நேரமாக வந்து உதவிகள் செய்யுங்கோ” என்று சொன்னேன் . பரதன் (மொரிஸ்) சங்கருடன் ஆத்தியடியில் கடையில் மிகவும் சிறப்பாக நிர்வாகம் செய்தான். தயாநிதி மாஸ்டரும் அங்கு சில உதவிகளைச் செய்தார். சங்கரும், கேசரியும், தயநிதி மாஸ்டரும், பரதனும் இன்னும் முரளி(சார்ல்ஸ், கணேஷ் எல்லோரும் உறவுகள் போல், அது ஒரு நல்ல குழுவாக எங்கள் ஆலோசனைகளை செய்யல் படுத்தும் குழுவாக செயல்பட்டார்கள். அப்படி சொல்லி ஒரு மாதத்துக்குள் அவனின் செயல்பாடுகள் பிரமிக்க தக்கதாக இருந்தது. தனது நண்பர்கள் முரளி, கணேஷ் ஆகியோரையும் எங்களுக்கு அறிமுகம் செய்து “அவர்களும் இருந்தால் இன்னும் ஒரு கடையை சிறப்பாகச் செய்யலாம்” என்றான் அவன். சரி உனக்கு புதிதாக ஒரு கடை தரலாம் என்று மாஸ்டரும் சொனார்.

சவனைப் பகுதியில் ஒரு இடத்தில் கடை அமைத்துக் கொடுத்தோம். அப்படி படிப்படியாக அவன் போராட்ட வாழ்வு தொடங்கியது. தபால்கார நண்பர் ஒருவரின் மிதி வண்டி ஒன்றை கடைக்குத் தேவையான பொருள்களை கொண்டு வருவதற்கு பயன் படுத்தினான். பருத்தித்துறை வீதிகளில் கணேஷ் மிதிக்க மொரிஸ் அந்த முன் கூடைக்குள் இருந்து செல்வது வேடிக்கையாக இருக்கும். பாடசாலை ஒன்பதாவது முடித்து பத்தாவது தொடங்கும் பொழுது அவன் “காவலுக்கு தானும் செல்லவேண்டும்”(Centryக்கு) என்றான். அப்பொழுது சிங்கள இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு அடிக்கடி சண்டை நடக்கும். அப்பொழுதெல்லாம் கடையில் யாரையாவது விட்டு விட்டு களத்தில் வந்து நிற்பான்.

கடையில் அவன் நண்பர்கள் எல்லோரும் வந்து நிற்பார்கள். ஒருநாள் எங்கோ ஒரு தவறு நடந்து விட்டது. கடைக்கணக்கில் சில சிக்கல்கள். மொரிஸ்தான் கடைக்கு பொறுப்பு. சூசை வந்து மொரிசிடம் சொல்லிவிட்டார் “இனி உனக்கு கடை சரிவராது” என்று. “எல்லோரையும் கடையில் விட்டுப்போட்டு உன் பாட்டுக்கு நீ போனால் இப்படித்தான் நடக்கும். நண்பர் என்றாலும் பொறுப்பு உன்னுடையது” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.  “வீட்டுக்குப் போ. ஒருமாதம் இங்க வரகூடாது” என்று. நான் சூசையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். சூசை முடிவு எடுத்தால் அண்ணன் சொன்னலும் மாற்றாது. அவ்வளவு உறுதியானவர். என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மொரிஸ் அழுதான். சிறு போராளி அவன்.  “சதா அண்ணா, நான் பிழைவிட்டு இருப்பன் என்று நீங்க நினைகிறீங்களோ” என்று கேட்கும் பொழுது எனக்கே கண் கலங்கியது .

“இது ஒரு பயிற்சி உனக்கு. இயக்கம் அப்படித்தான். உன்னை ஒரு மாதம் வீட்டில் இரு என்றுதானே சூசை சொன்னார். அதைச் செய்” என்று சொலிவிட்டு நான் கடைப் பொறுப்பை கணேஸிடம் ஒப்படைத்தேன். ஆனால் மொரிஸ் எங்கள் எல்லோரையும் திணறடித்தான். உண்ணாவிரதம் இருந்தான். முதல் நாள் நான் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. “நான் வீட்டுக்குப் போகப் போவதில்லை” என்று கடையின் பின்பக்கம் ஒரு மூலையில் இருந்து கொண்டான். மூன்று நாள் அவன் ஏதும் அருந்தவில்லை. சாப்பிடவில்லை. சோர்ந்து போய் இருந்தான். நிலைமையைச் சூசைக்கு அறிவித்தேன். சூசை உடனடியாக வந்தார். அவனை அப்படியே தூக்கி, ஒரு குழந்தையைப் போல அரவணைத்து, சாப்பிட வைத்தார். “சரி கடையை நடத்து” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

பின் அண்ணனின் நேரடிப் பார்வையில் ஒரு சிறப்புப்படை அணிக்கான பயிற்சிக்கு ஆட்கள் தெரிவு நடந்தது. அதில் மொரிசும் இடம் பெற்றான். அதற்கான மனதிடம் அவனிடம் இருந்தது. அண்ணனின் பாதுகாப்பு அணியில் சொர்ணத்தின் நிர்வாகத்தில் மொரிஸ் சாதனை படைத்தான்.

மொரிஸ் சிங்கள இந்திய இராணுவத்துக்கு சிம்ம சொப்பனம். ரவி ராஜின் வீரமரணம் அவனை வெகுவாகப் பாதித்து இருந்தது. பின்னாளில் மொரிசுடன் நின்று இறுதிக் களமாடிய பெரியண்ணா என்னைச் சந்தித்து மொறிஸின், என் மீதான பாசத்தைச் சொன்ன பொழுது நான் கண் கலங்கினேன். என் பார்வையில் வளர்ந்த பல போராளிகளில் மொரிஸின் அந்தச் சிரித்த முகம் என் மனதில் இன்னும் நிலையாக இருக்கிறது.

இந்தத் தருணத்தில்
கப்டன் மொரிஸ்
மேஜர் கேசரி
லேப்டிநெட் சங்கர்
மேஜர் மலரவன் வேலன்
லேப்டிநெட் சிறி
கப்டன் நாதன்
லேப்டிநெட் இன்பன்
லெப்டினென்ட் காந்தன்
லேப்டிநெட் ரமணன்
லேப்டிநெட் முரளி
லேபதினெட் வெள்ளை
கப்டன் ரஞ்சன் சித்தப்பா

என்று ஆயிரம் ஆயிரம் போராளிகளை நினவு கூருகின்றேன்.

ஒவ்வோருவரும் ஒவ்வொரு காவியம் இன்னும் எழுதுவேன் என் ஆயுள் போதுமோ தெரியவில்லை!

– சதாவின் நாட்குறிப்பு

Tuesday, April 14, 2015

Morris letter from 27.04.1989 - 3


மொறிஸ் 27.4.1989 அன்று அக்காவுக்கு எழுதிய கடிதம் ஒன்றிலிருந்து

Morris letter from 27.04.1989 - 2

மொறிஸ் 27.4.1989 அன்று  எழுதிய கடிதத்திலிருந்து

Morris letter from 10.05.1987

மொறிஸ் 10.05.1987அன்று அக்காவுக்கு எழுதிய கடிதம் ஒன்றிலிருந்து

Morris letter from 27.04.1989

மொறிஸ் 27.4.1989 அன்று அக்காவுக்கு எழுதிய கடிதம் ஒன்றிலிருந்து

Monday, April 13, 2015

கப்டன் மொறிஸ்

கப்டன் மொறிஸ் (செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989, மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை) என்ற புனைபெயரைக் கொண்ட பரதரராஜன் தியாகராஜா ஒரு விடுதலைப் புலி போராளியாவார். இவர் தனது பதினைந்தாவது வயதில், 1984இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, ஐந்து ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டார். குறுகிய காலப் பகுதியில் அளப்பரிய இயக்கப் பணிகளாற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர்[1] ஆனார். மே 1, 1989 இல் இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரமரணம் அடைந்தார்.

இவர் தியாகராஜா மற்றும் சிவகாமசுந்தரி தம்பதிகளின் ஆறாவது புதல்வன். இவரது தந்தை சபாபதிப்பிள்ளை தியாகராஜா இலங்கையின் புகையிரதநிலைய அதிபராக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் பல வருடங்களாகக் கடமையாற்றியவர். இவரது அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்) கவிஞர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் புலிகளின் குரல் வானொலிக்கு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். இவரது தம்பி மயூரன், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராவார். மயூரன் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையில் நவம்பர் 11, 1993 இல் வீரமரணமடைந்தார்.

மொறிஸ் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும், புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலையிலும் கற்றார்.

1984 இல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். [2] 1983 இல் தென்னிலங்கையில் நிகழ்ந்த தமிழர் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்து போராளிகளின் படகோட்டியாக இருந்த மறைந்த பொலிகண்டி கணேஸ்மாமா உடனான சந்திப்பும் இவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையக் காரணமாகக் கருதப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் மற்றும் போராளிகளின் போர்க் கடமைகளுக்கு உதவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார். பருத்தித்துறை, தம்பசெட்டி வீதியால் சென்று கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் வாகனத்திற்கு ´கிரனைட்´ எறிந்து அவர்களின் ரோந்து நடவடிக்கையைத் தடை செய்ததால்,மேலிடத்தின் உடனடிக் கவனத்துக்கு உள்ளாகி சில முக்கிய பதவிகள் மொறிஸிடம் கையளிக்கப்பட்டது.

ஆற்றிய முக்கிய பணிகள்

  • 1985 இல் தொண்டைமானாற்றில் போராளிகளின் காவல் தரிப்பில் கண்விழித்துக் காவலில் ஈடுபட்டு இராணுவம் கடல் வழியாக உள்ளே நுழையாமல் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தும் கடமைகளில் ஈடுபட்டிருந்தார்.
  • அந்தக் காலகட்டத்திலேயே போராளிகளுக்கான விசேட இராணுவப் பயிற்சி பெற்று முதற் தடவையாக பூநகரித் தாக்குதலில் பங்கேற்று வெற்றி கண்டதுடன் நெருப்புக் காயங்களுக்கு ஆளாகி யாழ் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார்.
  • 1986 இல் பருத்தித்துறை, கலட்டிப் பகுதியில் நியாய விலைக் கடை ஆரம்பித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் ஊர்மக்களுக்கு நியாய விலையில் பொருட்களை வழங்கியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்குத் தேவையான பணத்தைத் திரட்ட உதவிகள் புரிந்தார்.
  • 1987 இல் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அப்பிரதேச மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதுவும் சிங்கள இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தும் கொடுமைகளிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதும் இவரின் முக்கிய பணியாக அமைந்தது.
  • அதே சமயம் போர்ச்சூழலினால் நீதி மன்றங்கள் இயங்காமல் இருந்த காரணத்தினால் அமைப்பு சார்பான கிராம நீதிமன்றங்களை நிறுவி, மக்களின் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்து வைக்கும் பணியிலும் அவர் பெரு வெற்றி கண்டிருந்தார்.
  • 1988 இல் மொறிஸ் வடமராட்சி மக்களின் அன்பிற்கும் பெருநம்பிக்கைக்கும் ஆளாகியதுடன் 1987 இல் வந்திறங்கிய இந்திய இராணுவத்தினரின் பெரும் தேடுதலுக்கும் ஆளானார். இதனால் 1987 - 1988 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினருக்கு எதிரான பல தாக்குதல்களை நிகழ்த்தி பெரு வெற்றி கண்டிருந்தார்.
  • இக் காலகட்டம் மக்களுக்கும், போராளிகளுக்கும் பெரும் சோதனையான காலம் என்பதால் அநேக போராளிகளின் வாழ்வு காடுகளுக்குள் நகர்ந்தது. ஆனால் அந்த இக்கட்டான நிலையிலும் பிரதேசப் பொறுப்பாளர்கள் அந்தந்த ஊர்களிலேயே இருந்து பணி புரிய வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. அது அவர்களுக்கு மிகக் கடுமையான காலமாகவே அமையப் பெற்றிருந்தது. உணவும், உறையுளும் அற்ற கொடுமையான வாழ்வை மொறிஸ் உம் அணுவணுவாய் அனுபவித்தார்.

1989, மே 1ம் நாள், மந்திகையில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவம், பருத்தித்துறை துறைமுகத்தடியில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவம், மற்றும் வியாபாரிமூலையில் முகாமிட்டிருந்த இந்திய இராணுவம் - இம் மூன்று இராணுவமும் எட்டப்பர் கூட்டத்தினரின் உதவியுடன் மும்முனைச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு மொறிஸைப் பிடிக்க வேண்டுமென்ற நோக்கில் தந்திரமான தாக்குதலை நிகழ்த்திய வேளை மொறிஸ் தனித்து நின்று போராடி... இராணுவ உயர்அதிகாரிகள் மூவரைச் சுட்டு வீழ்த்தி விட்டு ஈற்றில் பசூக்கா ஷெல்லின் தாக்குதலில் எரிகாயங்களுக்கு உள்ளாகி, அதே வேளை சயனைட்டும் அருந்தி வீரமரணம் அடைந்தார்.

கப்டன் மொறிஸ் வீரவணக்கம்


கேணல் சார்ள்ஸ்

இந்திய இராணுவத்தின் வருகையுடன் புதிய மோதல்கள் எழுந்தன. இந்திய அமைதி காக்கும் படையுடன் எல்.ரீ.ரீ.ஈ போர் தொடுத்தது. சாள்ஸ், யாழ்ப்பாண குடாநாட்டிலேயே தங்கியிருந்து கெரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தார். அவர் வடமராட்சி கிழக்கில் கப்டன் மொரிஸ் தலைமையில் உள்ள பிரிவில் நிலைகொண்ருந்தார்.

திங்கள், 14 ஜனவரி, 2013
 Quelle - http://marikumar.blogspot.de/2013/01/2.html

இந்திய இராணுவத்துடன் கேர்ணல் சாள்ஸ்!

சிங்கள இராணுவத்தின் அடக்கு முறைகளும் அட்டூழியங்களும் மிக அதிக அளவில் தலைவிரித்தாடிய மண் அது!

அதனால்தான் தன் பள்ளிப்படிப்புடன் ஆயுத முனைக்கு, முனையில் இருந்து வந்தான் ரவிசங்கர் என்னும் சாள்ஸ்.பயிற்சி முடிந்ததுமே அவனுக்கு களமாட கிடைத்த பெரும் வாய்ப்புத்தான் இந்திய ராணுவத்துக்கு எதிராக மோதும் வாய்ப்பு,அதுவும் வடமராச்சியில் கிடைத்தது ஆகும்.

அந்த வேளைகளில் கப்டன் மொரிஸ் என்னும் போராளியின் படை அணியில் ஒருவனாக இணைந்து சாள்ஸ் தன் போராட்ட கத்தியை தீட்டிக் கொண்டான்! 

இந்திய இராணுவம் வடமராச்சியில் அப்போது வாங்கிய அடிகளுக்கு பொறுப்பாக இருந்த நாயகன்தான் சாள்சாகும்! சாள்சுக்கு அந்த வேளைகளில் சரியான களம் அமைத்துக் கொடுத்தவர் அப்போது பருத்தித்துறைப் பொறுப்பாளர் ஆக இருந்த கப்டன் மொரிஸ் ஆகும்!

Quelle - http://www.velichaveedu.com/79141030/

இராணுவ புலனாய்வு தளபதி சாள்ஸ் அண்ணனுக்கு வீர வணக்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கேணல் சாள்சின் வீரவணக்க நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும்.

கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி.

யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்ஸ்.

சிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த நியாய விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

பின்னர் வடமராட்சியில் "ஒப்பரேசன் லிபரேசன்" நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடி பிற்பாடு விலகி மீண்டும் மில்லரின் புதிய சகாப்தத்துடன் உள்நுழைந்து சாதனை படைத்தார்.

இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார்.

உண்மையில் நீண்டகாலமாக தென்னிலங்கையில் நின்று வெற்றிகரமாக பல தாக்குதல்களை குறிப்பாக சிறிலங்காப் படையின் கூட்டுப்படைத் தலைமையகம் உள்ளிட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களை தலைமையேற்று வழிநடத்தி அங்கு சிறிலங்காப் படைகனளால் தேடப்படும் போது மட்ட்க்களப்பைத் தளமாக வைத்துக்கொண்டு பல வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டு வழிநடத்தினார்.

2001 ஆம் ஆண்டு உலகமே வியக்கத்தக்க வகையில் எந்தவொரு பொதுமகனும், வெளிநாட்டுப் பிரயாணியும் பாதிப்படையாத வகையில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தினை தகர்த்து எறிவதற்காக கரும்புலி அணிக்கான நீண்டகாலப் பயிற்சியினை வழங்கி, தாக்குதலை வழிநடத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த உத்தமவீரன். ஆனால் எங்கள் மக்களுக்கு அவர் முகம் தெரியாத ஒரு தளபதி.

தொடக்க காலத்தில் தான் சார்ந்திருந்த துறையில் இருந்து கொண்டு கடற்புலிகளையும் வடக்கு-கிழக்கிற்குள் மட்டுப்படுத்தப்படாமல் தெற்கிலும் பாரிய தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் சில மறைமுக கடற்கரும்புலிகளை உருவாக்கி அவர்களுக்கு புலனாய்வுத்துறையில் பணிகளை முன்னெடுத்த அதேநேரம் ஒரு அணியை உருவாக்கி அந்த அணிக்கு ஊடாக சிறிலங்காவின் காலி கடற்படைத்தளத்தை மறைமுக கடற்கரும்புலிகளைக் கொண்டு தகர்ப்பதற்காக பல ஆண்டுகளாக அப்பணியைத் தொடர்ந்து, அத்தாக்குதல் நடைபெறுகின்ற நேரம் தொடர்புகளைப் பேணி வழி நடத்திய தளபதி இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட போராளிகள் கண்டிப்பாக அவரின் கனவுகளை சுமந்து இப்போரியலை முன்னெடுத்துச் செல்வர்.

சாள்ஸ் தாக்குதலிலும் நடவடிக்கைகளிலும் மட்டும் விற்பனர் அல்ல. எல்லோரோடும், தலைவர் அவர்களுடனும் நட்பு உரிமையுடன் பழகுகின்றவர். இவர் தனித்துவமாக தெற்கில் மட்டும் தகாக்குதலை தீவிரப்படுத்தவில்லை. யாழ். குடாநாட்டிலும் தாக்குதலை முன்னெடுத்து புதிய படைய புலனாய்புப் போராளிகளைக் கொண்டு முகமாலை முன்னரங்க நிலைகளை உடைத்து முன்னேறுகின்ற நடவடிக்கையிலும் அணியை வழிநடத்தியவர் இன்று இல்லை.

இன்றை சூழ்நிலையில் இவரின் இழப்பு விடுதலைப் போராட்த்திற்கு பாரிய இழப்பாகவும் உள்ளது. எமது விடுதலைப் போராட்டம் பல தளபதிகளையும் துறைசார் பொறுப்பாளர்களையும் இழந்து நிற்பினும் படிப்படியாக பல வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றது.

இழப்புக்களை தாங்கிக்கொள்வது கடினம். ஆனால் இழப்புக்கள் இல்லாமல் விடுதலையை பெற்றுவிட முடியாது. நிச்சயமாக சாள்சின் கனவினையும் விடுதலைப் போராட்டத்தின் எண்ணத்தையும் முன்னெடுத்து எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்குவோம் என்றார் அவர்.

http://www.puthinam....3g2dZ0cc3uk0Jde

------------------------------------------------------------------------------------

வந்தி

Posted 07 ஜனவரி 2008 - 11:52 காலை
ஈழவன்85, on Jan 7 2008, 12:34 PM, said:
இராணுவ புலனாய்வு தளபதி சாள்ஸ் அண்ணனுக்கு வீர வணக்கம்

இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.
http://www.puthinam....3g2dZ0cc3uk0Jde
மொறிஸ் அண்ணா பிரபல வலைப்பதிவாளர் ஒருவரின் சகோதரர். அத்துடன் அவரது தாக்குதல்கள் சில்வற்றை நேரிலும் பார்த்த அனுபவம் உண்டு. கல்லூரி வீதியில் மொறிஸ் அண்ணாவின் சாகசங்கள் பிரபலமானவை
இணையதளபதி - வந்தி
 

செப்டம்பர் 12 – வரலாற்றில் இன்று!

1921 – நள்ளிரவில் பாரதியாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் சுமார் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி வீட்டுக்காவலிலிருந்து ஜெர்மனிய படைத்தளபதி “ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.

1969 – விடுதலைப் புலிகளின் போராளி, கப்டன் மொறிஸ் பிறந்ததினம்.

1974 – எதியோப்பியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மன்னர் ஹைலி செலாசி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1977 – தென்னாபிரிக்காவின் நிறக்கொள்கைக்கெதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்

Quelle - http://tamilsnow.com/?p=23320.

Monday, April 6, 2015

Captain Morris

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: மொறிஸ்
இயற்பெயர்: தியாகராசா பரதராஜன்
பால்: ஆண்
ஊர்: ஆத்தியடி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 12.09.1969
வீரச்சாவு: 01.05.1989
நிகழ்வு: யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆத்தியடியில் இந்தியப்படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம்
மேலதிக விபரம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பரதரராஜன் தியாகராஜா - ஆத்தியடி, பருத்தித்துறை
கப்டன் மொறிஸ்

நான் போர்முனையில்
குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்
மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே..!

  
என்றான். அவன்தான் மொறிஸ்!

1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை.

மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத் துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான்.
நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.

சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான்.
பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு.

முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு.

ஆமி குடி கொண்டிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவர்கள் இருப்பிடங்களைச் சுற்றி சக்கை தாட்டு விட்டு வருவதில் இவனுக்கு நிகர் இவனே தான். அதனால் இவனை பருத்தித்துறை மக்கள் அன்பாக M.O (Mines operator) என்று அழைப்பார்கள்.

1987 ம் ஆண்டு யூலை 29 இல் இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் கால் வைத்தது. காந்தி பிறந்த தேசத்திலிருந்து அமைதி காக்க என்று சொல்லி வந்த படை ஆக்கிரமிப்புப் படையாகி புலிகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொல்லும் பணியில் ஈடுபடத் தொடங்கியது. தாயக மண் மீட்பே தன் மூச்செனக் கொண்டு வடமராட்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக் கொண்ட மொறிஸ் மீது ஆக்கிரமிப்புப் படையின் கவனம் காட்டமாக இருந்தது. எப்படியாவது அவனைப் பிடித்து விடவேண்டுமென்ற எண்ணத்துடன் வெறி கொண்ட நாய் போல அவனைத் தேடி அலையத் தொடங்கியது.

மொறிஸோ இந்திய இராணுவத்தின் கண்ணெதிரில் அகப்பட்டும் அவர்கள் பால் தன் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களுக்குள் தான் அகப்படாது மாயமாய் மறைந்தான். ஐந்து தடவைகள் இந்தியப் படைகள் சுற்றி வளைத்த போதும் அவர்கள் கண்களுக்குள் அகப்படாது தப்பித்துக் கொண்டான். அவன் சாதாரண துப்பாக்கி வேட்டுக்களுக்கெல்லாம் அகப்படுபவன் அல்ல.

ஆறாவது தடவையாக இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப் பட்ட போதும் கலங்காது நின்று போராடி வெற்றியும் கண்டான்.

அவனது நேரடி மோதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பலத்த இழப்புகளோடு தப்பியோடிய இந்தியப் படையினரில் பலர் பதவி இறக்கப்பட்டனர். உலகின் நாலாவது வல்லரசின் இராணுவச் சிப்பாய்கள் மொறிஸ் என்ற நாமம் கேட்டாலே நடுங்கினர். அவன் நாமம் சொன்ன அப்பாவி மக்களை அடித்தும் உதைத்தும் சித்திரவதைப் படுத்தினர். அவன் பெற்றோரை உடன் பிறப்புகளை மைத்துனரை எல்லாம் இராணுவ முகாம் வரை கொண்டு சென்று துன்புறுத்தினர்.

இதனால் மொறிஸின் மனம் வேதனையில் வாடினாலும் தமிழீழத்தின் மீது அவன் வைத்த நம்பிக்கை எள்ளளவேனும் குறையவில்லை. அவனது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போயிற்று.

இந்தியப் படையின் தேடுதல் வேட்டைக்கு நடுவிலும் மொறிஸின் பணிகள் தொடர்ந்தன. இயக்க வளர்ச்சியில் அவன் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்தான். சாதாரண படை வீரனாகச் சேர்ந்த அவன் கப்டன் பதவிவரை உயர்வு பெற்று மிகமிக ஆபத்தான சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் நடமாடி இயக்க வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எண்ணிலடங்காதவை.
வெற்றிகள் பல ஈட்டி அளப்பரிய சாதனைகள் பல புரிந்து மக்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டான் கப்டன் மொறிஸ்.

நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானான். தன்சகாக்களை அன்புடன் நேசிப்பதில் அவனுக்கு நிகர் அவனேயானான். இயக்கத்தின் மீதும் இயக்க உறுப்பினர்கள் மீதும் அவன் கொண்டிருந்த மட்டற்ற அன்பையும் விசுவாசத்தையும், போராட்டத்தின் மீது அவன் கொண்டிருந்த தீர்க்கத்தையும் கடைசி நேரம் வரைக்கும் அவன் செய்த செயல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
பருத்தித்துறை வாழ் மக்கள் அவனை மிகவும் நேசித்தனர். அவனும் மக்களை மிகவும் நேசித்தான்.

ஆனாலும் எட்டப்பர் கூட்டம் தம் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யத் தவறவில்லை. காட்டிக் கொடுக்கும் எட்டப்பரை இல்லாது ஒழித்து அழிக்க வேண்டுமென அடிக்கடி சொன்னான். சொன்னதை அவன் செயற் படுத்தி முடிக்கும் முன் எட்டப்பர் சூழ்ச்சிக்கு அவனே பலியானான்.
அன்று... 1989 ம் ஆண்டு. மே முதலாம் திகதி. (1.5.89)- அதிகாலை.
மொறிஸ் முதல் நாள் இரவு நீண்ட நேரமாகத் தன் நண்பர்களுடன் சில திட்டங்கள் பற்றிக் கதைத்து விட்டு நேரங்கழித்தே நித்திரைக்குச் சென்றான். .காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்து தன் கடமைக்குத் தயாரானான்.

சாப்பாட்டுக்கு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும். அதற்கு முன் இயக்க சம்பந்தமான பரிசோதனை ஒன்று செய்ய வேண்டி இருந்ததால் தனது சகதோழர்கள் ஏழு பேர்களுடன் சேர்ந்து அந்தப் பரிசோதனையில் ஈடுபட்டான்.

அந்த நேரத்தில்தான் அவன் இந்திய அமைதிப்படையினரால் சுற்றி வளைக்கப் படத் தொடங்கியிருந்தான். தான் ஒரு எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப் பட்டு விட்டேன் என்பதோ, தான் அந்த நேரத்தில் சுற்றி வளைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதோ அவனுக்குத் தெரியாது. அவன் அதை அந்த இடத்தில், அந்த நேரத்தில் துளியும் எதிர்பாராது தன் கடமையில் கவனாமாயிருந்தான்.

500க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் அவன் இருந்த வீடு இருந்த பகுதியை வரைபடத்துடன் சுற்றி வளைத்திருந்தனர். அவன் மீது நேசமும் பாசமும் கொண்ட பருத்தித்துறை வாழ் மக்கள், அவனுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்க ஓடி வந்தனர். அவன் விடயத்தில் பலமுறை தோல்வியைத் தழுவிக் கொண்ட இந்தியப் படையினர் ஓடி வந்த மக்களை மேற் கொண்டு நகர விடாது அவ்விடங்களிலேயே அதாவது தெருவீதியிலேயே இருத்தி விட்டனர்.

சுற்றியுள்ள காணிகள், வீடுகள், வீதிகள் என்று எல்லா இடங்களிலும், எந்தப் பக்கம் பார்த்தாலும் இந்தியப் படையினர் நிறைந்து சுற்றி வளைத்திருந்தனர். நடுவில் மொறிஸ் தன் சகாக்களுடன் தனது பணியில் ஈடுபட்டிருந்தான்.

தான் காட்டிக் கொடுக்கப் பட்டதையும், சுற்றி வளைக்கப் பட்டிருப்பதையும், தன் நிலையையும் அறிந்த போது மொறிஸ் சிறிதும் கலங்கவில்லை. அஞ்சி ஓடவில்லை. தன் மெய்ப்பாது காவலனையும், காவல் கடமைக்குப் பொறுப்பான போராளியையும் மட்டும் தன்னுடன் நிற்கச் சொல்லி விட்டு
இந்தியப் படையை நோக்கிச் சுட்டவாறே "நான் ஒரு கை பார்த்திட்டு வாறன். நீங்கள் ஓடுங்கடா" என்று கத்தினான். அவன் கட்டளைப் படி மிகுதி ஐவரும் அவன் சொன்ன பாதை வழியே சுட்டுக் கொண்டு ஓடினர்.

மொறிஸ் தொடர்ந்து இந்தியப் படையுடன் நேரடியாக மோதினான். அவனது துப்பாக்கி ரவைகள் இந்தியப்படையில் மூன்று பெரியவர்களைச் சுட்டு வீழ்த்தியது. இந்த நேரம் இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு காவல் போராளி சிறீதரன் (வெள்ளை) பலியானான்.

மொறிஸ் தொடர்ந்து போராடினான். இந்தியப் படையினர் சரமாரியாகச் சுட்ட சூடுகள் அனைத்துக்கும் தப்பித் தப்பிப் பாய்ந்த படி, அவர்களைச் சுட்டவாறே அவன் அடுத்த காணிக்குள் பாய முற்பட்டான். அந்த வேளையிலேயே பின் காணி முழவதும் இந்தியப்படை நிற்பதை அவதானித்தான். இந்த நிலையிலுங் கூட அவன் கலங்கவில்லை. தொடர்ந்து அவர்களை நோக்கிச் சுட்டுக் கொண்டும் அவர்களின் சூட்டிலிருந்து தப்பிக் கொண்டும் இருந்தான்.

துப்பாக்கி ரவையினால் அவனை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த இந்தியப் படையினர் அவன் நின்ற இடத்தைக் குறிபார்த்து பசூக்கா ஷெல்லும் அடித்து கிரனைட்டையும் எறிந்தார்கள். ஷெல் துண்டுகள் அவன் மார்பையும் தலையையும் பதம் பார்க்க கரும்புகை மண்டலத்துக்குள் இரத்த வெள்ளத்தோடு மண்ணுக்கு வித்தானான் மொறிஸ்.

பின் அவனின் மெய்ப் பாது காவலன் ஜெகேசன் (லெப். ரம்போ)இன் உடலையும் சல்லடையாக்கினர் இந்தியப் படையினர்.

மாவீரர்களான மொறிஸ், ரம்போ, வெள்ளை மூவரையும் இழந்து நாடே அழுதது.

மொறிஸை விண்ணுலகுக்கு அனுப்பிய இந்தியப் படையினருக்குப் பதவி உயர்வாம்! விருந்தாம்! தங்கப்பதக்கமாம்!

மொறிஸ் நாட்டில் மக்களுடன் மக்களாக நின்று போராடி மண்ணுக்கு வித்தானான். மொறிஸின் தம்பி மயூரன் காட்டில் தலைவர் அருகில் நின்று,பின்னர் பூநகரிச் சமரில் 11.11.93 இல் மண்ணுக்கு வித்தானான்.